வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறவிட்டீர்களா.. உங்களுக்கான செய்தி இது

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் கிர் லோஷ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில்,   “ தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதியன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் வேலைவாய்ப்பு  அலுவலகத்தில் பதிவு செய்து  தங்கள் பதிவை 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்க தவறிய 48 லட்சம் பதிவுதாரர்கள் பயனடையும் வகையில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும்.

2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு ஏற்கனவே 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. இக்கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்று புதுப்பித்தல் சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து வழங்கப்படும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும், 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பிற்கான பதிவை புதுப்பிக்க கடந்த மே மாத அரசாணையில் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படுகிறது.

இந்தச் சலுகையை பெற விரும்பும் நபர்கள் அரசாணை வெளியிடப்படும் நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் விடுபட்ட பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். 3 மாதங்களுக்கு பின்பு பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 1.1.2014 தேதிக்கு முன்பு புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.