TRB – Polytechnic College lecturer Post | Tentative Exam Date Announced Full details
அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வுத் தேதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தத் தேதிகள் பெருந்தொற்றுச் சூழல், தேர்வு மையங்களின் தயார் நிலை, மற்றும் நிர்வாக வசதியைப் பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்பப் பட்டயப் படிப்புகளுக்கு 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
இதற்கிடையே அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து செப்டம்பரில் நடந்த தேர்வில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 568 பேர் தேர்வு எழுதினர். தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டின்போது முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இறுதியில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, கடந்த 2019-ம் ஆண்டு நவ.27-ம் தேதி 1,060 பணியிடங்களுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியானது.
இதைத் தொடர்ந்து விண்ணப்பப் பதிவு நடைபெற்றும் தேர்வுத் தேதிகள் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், தற்போது தேதிகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
”அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்களுக்குப் பணி சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை கடந்த 2019ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் ஜனவரி 2, 2020 முதல் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், விண்ணப்பதாரர் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்ய பிப்ரவரி 2ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் கணினிவழித் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது அக்டோபர் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தேதிகள் பெருந்தொற்றுச் சூழல், தேர்வு மையங்களின் தயார் நிலை, மற்றும் நிர்வாக வசதியைப் பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்படுகிறது”.
இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Source : The hindu Tamil thisai